இலங்கை கடற்பரப்பைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் – மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.!
இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அனைத்து மீனவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் தற்போது நிலவும் அபாயகரமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையை முன்னிட்டு, சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த அவர், தற்போது கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத பயண வழிகளை பயன்படுத்தவோ அல்லது அறிமுகமற்ற கடற்பகுதிகளில் நுழையவோ கூடாது என வலியுறுத்தினார்.
மீனவ மக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தமக்கு அனுமதிக்கப்பட்ட மற்றும் வழமையான கடல் பயண வழிகளையே பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கடலில் ஏதேனும் ஆபத்தான அல்லது அவசர நிலை ஏற்பட்டால், 24 மணி நேரமும் செயல்படும் MRCC நிலையத்தையோ அல்லது கடற்றொழில் திணைக்களத்தின் தகவல் தொடர்பு மையத்தையோ உடனடியாக தொடர்புகொள்ளுமாறு அனைத்து மீனவர்களும் படகு உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.