மீனவர்களுக்கு தடையின்றி எரிபொருள்; விசேட பொறிமுறை தயார்.!
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எவ்விதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடானது ஒரு ‘செயற்கையான’ சூழலாகும். இன்னும் ஓரிரு வாரங்களில் நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும்.
எரிபொருள் விநியோகத்தில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய பொறிமுறை ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆழ்கடல் மற்றும் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் மீனவர்கள் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்களை அல்லது தடைகளை எதிர்கொண்டால், அவை குறித்து உடனடியாகக் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கடற்றொழில் அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்.” – என்றார்.