வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது.!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் ரகத் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற ஊனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் அம்பாந்தோட்டை, பல்லேமலல பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு 9 ஆவது கெமுனு ஹேவா படையணியில் சிப்பாயாகப் பணியாற்றியவர் எனவும், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின்போது, இந்தச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கஞ்சா மற்றும் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.