மலையகம் 200 நடைபயணத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு.!
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட எமது மலையக மக்கள், 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணி மற்றும் நில உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களும் இந்த நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில், அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இம் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்வதற்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக “மலையகம் 200” நடைபயணம் அமைந்தது.
2022.07.28 அன்று தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை 280 கிலோமீற்றர் தூரம், 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நடைபயணம் மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் சில கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து இதனை சமய நிகழ்வாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதிலும், மலையக மக்களின் வாழ்வாதார மற்றும் உரிமைப் பிரச்சினைகள் தாக்கம் உள்ளதாக வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆய்வாளர்கள் முன்வந்தனர்.
அவர்களின் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், அனைவரின் பங்களிப்புடனும் இந்த நடைப்பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
280 கிலோமீற்றர் தூரம் நடப்பது எளிய காரியம் அல்ல. நடையாளர்களைத் தெரிவு செய்வதிலும், அவர்களைத் தயார்படுத்துவதிலும் பல சவால்கள் இருந்தன. பிரிடோ நிறுவனம் 20 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் என மொத்தம் 50 பேரை முழு நேர நடையாளர்களாகத் தெரிவு செய்து இந்த முயற்சியை முன்னெடுத்தது.
இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தாலும், இந்த நடைபயணத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக சில சிரேஷ்ட பிரஜைகளின் உணர்வுபூர்வமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
பிச்சை சந்தியாகு லோகநாதன், பெருமாள் கணேசன், முருகன் கணேசன் மற்றும் ஆறுமுகம் வேலு ஆகியோர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் அர்ப்பணிப்பு இந்த நடைபயணத்தின் அச்சாணியாக அமைந்தது.
இன்றைய சூழலில் பல உரிமைப் போராட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு குறைந்து காணப்பட்டாலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் உரிமைக்கான போராட்டங்களுக்கும் நீண்ட காலமாக உழைத்து வரும் சிரேஷ்ட பிரஜைகளின் பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாகும்.
அவர்களைப் பாராட்டி கௌரவிப்பது எமது ஒவ்வொருவரின் கடமையாகும்.
கடந்த வாரம் பிரிடோ நிறுவனம் தோட்டங்களில் இயங்கும் சமூக அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்காக ஹட்டனில் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கின் போது, மேற்கண்ட சிரேஷ்ட பிரஜைகள் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் அவர்கள் கௌரவிப்பை வழங்கியது நிகழ்வின் சிறப்பு அம்சமாகும்.




