மத்திய கிழக்கு மோதல்: இலங்கையர்களை உடனடி வெளியேற்றம் சாத்தியமில்லை – அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ.!
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக அப்பகுதியிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது தற்போது சாத்தியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 10 இலட்சம் இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அப்பிராந்தியத்தில் செயல்படும் இலங்கையின் இராஜதந்திரப் பணிகள் நிலைமைகளை நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், தற்போது இலங்கையில் தங்கியுள்ள பயணிகளின் விசாக்களை இரண்டு வாரங்களுக்கு இலவசமாக நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நீட்டிப்பு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். எதிர்கால முன்னேற்றங்களைப் பொருத்து இந்த முடிவு மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் பயணிகளுக்காக மாற்று விமான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.