அமெரிக்காவைக் கண்டிப்பதற்கு ஐ.நாவுக்கு முதுகெலும்பு இல்லை.!
“உலகையே அச்சுறுத்தி வரும் அமெரிக்காவின் கொடூரமான அதிகாரப் போட்டிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முதுகெலும்பு இல்லை” என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற “வர்க்கத்திற்கு அதிகாரம் – அதிகாரத்திற்கு கட்சி” எனும் அக்கட்சியின் 4ஆவது தேசிய மாநாட்டில் தலைமையுரையாற்றும் போதே அவர் இந்த அதிரடித் தாக்குதலைத் தொடுத்தார்.
அவரது உரையின் அதிரடிச் சுருக்கம் இதோ:-
“இன்று ஆட்சிப்பீடத்தில் இருக்கும் ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம், தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளைக் காலால் மிதித்து வருகின்றது. அன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தவர்கள், இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் அதைவிடக் கொடூரமான அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவரத் துடிக்கின்றனர். இலவசக் கல்வி மற்றும் சுகாதாரம் பேசியவர்கள், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடுகின்றனர்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் முற்றாக மண்டியிட்டுள்ளது. மோடி மற்றும் ட்ரம்ப் ஆகியோரின் பொருளாதாரத் தேவைகளுக்காக இலங்கையின் நிலங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டு, முழு நாட்டையுமே காட்டிக்கொடுத்துள்ளது.
முகங்களை மாற்றுவதாலோ அல்லது கட்சிகளை மாற்றுவதாலோ இங்கு விடிவு பிறக்காது. தற்போதுள்ள திருடர்களைப் பாதுகாக்கும் கொள்கையைத் தகர்க்க வேண்டுமானால், உழைக்கும் வர்க்கத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஒரே தீர்வாகும். பேரரசுவாதம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிராக ஒரு உண்மையான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப அனைத்து உழைக்கும் மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.” – என்றும் குமார் குணரத்தினம் அறைகூவல் விடுத்தார்.