இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!
நாட்டில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற இருவேறு உந்துருளி விபத்துக்களில் சிக்கி பெண் ஒருவரும் ஆணொருவரும் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுபோவில – தெஹிவளை வீதியில் களுபோவில பகுதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.
தெஹிவளை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று மற்றுமொரு வீதிக்கு திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த உந்துருளியுடன் மோதியுள்ளது.
இவ்விபத்தில் இரு உந்துருளி ஓட்டுநர்களும், ஒரு உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், 49 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த உந்துருளி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், மதவாச்சி – கெபித்திகொல்லேவ வீதியின் ஹீரல்லுகம பகுதியில் இரு உந்துருளிகள் மோதி மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.
ஹீரல்லுகம நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று எதிரே வந்த உந்துருளியுடன் மோதியதில், பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கெபித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 43 வயதுடைய எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.