தமிழ் மக்களின் ஆணையை மீறினார்; சிறீதரன் பதவி விலக வேண்டும் – தயாசிறி.!
அரசமைப்புக் கவுன்ஸிலில் சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்களின் ஆணையை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆதரவளித்து வருகிறார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
அரசமைப்புக் கவுன்ஸிலின் சுயாதீனத் தன்மையைப் பேண வேண்டிய நிலையில், சிறீதரன் அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு இணங்கச் செயற்படுவதாகவும், சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும், பூநகரி சூரிய சக்தி மின் திட்டம் தொடர்பில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மையமாகக் கொண்ட நிதி முறைகேடுகள் குறித்து சந்தேகம் வெளியிட்ட தயாசிறி, அந்த விவகாரத்தில் ‘சாரங்கன்’ என்ற நபரின் ஊடாக கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.
இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நியமனம் உள்ளிட்ட முக்கிய சந்தர்ப்பங்களில் எட்டு முறை அரசாங்கத்துக்கு ஆதரவாக சிறீதரன் வாக்களித்துள்ளதாகத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, அவர் அரசமைப்புக் கவுன்ஸிலில் தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை எனக் கூறி, உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.