திசைகாட்டியின் பேரணியில் லால் காந்த, நாமல் கருணாரத்ன பங்கேற்காதது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சியின் பேரணியில் கலந்துகொண்டதை கேள்விக்குட்படுத்திய அரசாங்கத்தின் சிலர், அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயி பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொள்ளாமையை கேள்விக்குட்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (16.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“அனுராதபுரத்தில் இடம்பெற்ற ‘ஜனசடன’ பேரணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடைந்த வெற்றி மட்டுமல்ல; மாறாக, ஜனநாயகத்தை மதிக்கும் நாட்டின் அனைத்து மக்களும் அடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் வெற்றியாகவே இதனைக் கருதுகிறோம். அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களுக்கு இந்த அரசாங்கம் கடுமையான அடக்குமுறைகளைப் பிரயோகித்து வரும் நிலையிலும், நாட்டின் பிரதான அரசியல் இயக்கம் என்ற ரீதியில் அதனைத் கடந்து இவ்வாறானதொரு மாபெரும் பேரணியை எம்மால் நடத்த முடிந்துள்ளது.
கடந்த தேர்தலில் திசைகாட்டிக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்களே எமது பேரணியில் திரண்டிருந்தனர். இதனால் அரசாங்கம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது ஒற்றைப் பேரணிக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் மூன்று பேரணிகளை ஏற்பாடு செய்ததுடன், ஜனாதிபதியும் தனது உரையின் பெரும்பகுதியை எமது பேரணிக்கு பதிலளிப்பதற்காகவே ஒதுக்கியிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கட்சி நடத்திய மாபெரும் பேரணியில் பங்கேற்றது இயல்பான ஒரு அரசியல் நிகழ்வாகும். ஆனால், அதனைப் விமர்சித்த அரசாங்கத் தரப்பினர், திசைகாட்டி அரசாங்கம் ஏற்பாடு செய்த விவசாயி பேரணியில் விவசாய அமைச்சர் லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் பங்கேற்கவில்லை என்பதை மறைக்கப் பார்க்கின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் வருகையை விட, விவசாயப் பகுதியில் நடத்தப்பட்ட விவசாயி பேரணியில் விவசாய அமைச்சரும் பிரதி அமைச்சரும் பங்கேற்காததே அதிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
விவசாயிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலை இப்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.” என சஞ்சீவ எதிரிமான்ன சுட்டிக்காட்டினார்