சவூதியின் குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் தனது முக்கியமான குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா மூடியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று (13) மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
கிழக்கு நேரப்படி மாலை 6:27 மணி நிலவரப்படி, அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 2.8% உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 102.87 டொலராக இருந்தது.
சர்வதேச அளவிலான முக்கியக் குறியீடான ‘பிரெண்ட்’ (Brent) மசகு எண்ணெய் விலை 3.1% அதிகரித்து, ஒரு பீப்பாய்க்கு 107.87 டொலராக வர்த்தகமானது.
ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் வியாழக்கிழமையன்று ‘கிழக்கு-மேற்கு’ குழாய் வழித்தடத்தைச் சேதப்படுத்தியதால், மசகு எண்ணெய் போக்குவரத்திற்கான அந்த முக்கிய வழித்தடத்தை மூட சவுதி அரசு நிர்பந்திக்கப்பட்டது.
குழாய் வழித்தடம் எந்த அளவுக்குச் சேதமடைந்துள்ளது அல்லது அது எவ்வளவு காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என்பது குறித்த விவரங்களை ரியாத் வெளியிடவில்லை.
ஞாயிற்றுக்கிழமை மற்றொரு எண்ணெய்க் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதில், கப்பலில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டதால், ஹார்முஸில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது என ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தினமும் 7 மில்லியன் பீப்பாய் எண்ணெயைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட சவுதி குழாய் வழித்தடமானது, ஈரான் போரினால் ஏற்பட்ட கடுமையான எண்ணெய் விநியோகத் தடையைச் சமாளிப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.
இக்குழாய் வழித்தடம் அந்நாட்டின் கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியுள்ளது.
இது பாரசீக வளைகுடாப் பகுதிக்கு அருகிலுள்ள எண்ணெய் உற்பத்திப் பகுதிகளையும், செங்கடல் கடற்கரையில் உள்ள ஏற்றுமதி முனையங்களையும் இணைக்கிறது.
ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டிற்காக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் நிலவும் சூழலில், மசகு எண்ணெய் ஏற்றுமதியை வளைகுடாப் பகுதியிலிருந்து மாற்றுவதற்கு சவுதி அரேபியா இந்த எரிபொருள் குழாய் வழித்தடத்தைச் சார்ந்திருக்கிறது.
அமெரிக்காவின் தலைமையிலான பெரும் அளவிலான மூலோபாய எண்ணெய் இருப்பு வெளியீட்டை விட, எண்ணெய் சந்தைகளை நிலைப்படுத்துவதில் இந்த எரிபொருள் குழாய் வழித்தடம் மிக முக்கிய பங்காற்றியுள்ளதாக சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர், ஆகஸ்ட் மாத வருவாய் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
சவுதி அரேபியா அண்மைய நாட்களாக ஈரான் ஆதரவு தீவிரவாதக் குழுக்களின் அதிகரித்து வரும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
ஏமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள் கடந்த வாரத் தொடக்கத்தில் சவூதி அரேபியாவில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சவூதி அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏமனின் மேற்கு கடற்கரையில் உள்ள மோகா துறைமுக நகரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பாப்-எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெரிம் தீவையும் ஹூதிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு செங்கடலை உலகளாவிய சந்தைகளுடன் இணைக்கும் பாப்-எல்-மண்டேப் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்க, இந்த முன்னேற்றங்கள் அந்த ஆயுதக் குழுவினருக்கு வலுவான நிலையை அளிக்கும்.
சவுதி அரேபியாவுக்கு எதிரான கடல்வழித் தடையை ஹவுத்திகள் கடந்த ஜூலை மாதம் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.