பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆம்பர் கிரீஸ் தொகையுடன் சந்தேக நபர்கள் கைது.!
மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை(11) கடற்படையின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவர, விலங்கின பாதுகாப்பு சட்ட பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கிலத்தின் ஆம்பர் கிரீஸ் (Ambergris) கைப்பற்றப்பட்ட நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தால் மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு கடத்தப்படவிருந்த 67 கிலோ கிராமிற்கும் அதிகமான திமிங்கிலத்தின் ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
