புனித தோமையார் வாசாப்பு நாடகம்.!
25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டி ஆலய சபை மற்றும் கிராம மக்கள் இணைந்து வழங்கிய ‘புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) மாலை முதல் இன்று திங்கள் (7) அதிகாலை வரை சிறப்பாக இடம்பெற்றது.
சமூக ஒற்றுமையை ஏற்படுத்துதல், பெரியவர்களுக்கு மதிப்பளித்தல், கடமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு போன்றவற்றுடன் சமூகத்தை வளர்த்தல், பொது நலன் முன்நிறுத்தப்படல், ஆற்றல்களையும், திறமைகளையும் வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக குறித்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, கௌரவ விருந்தினர்களாக முருங்கன் மெதடிஸ்த போதகர் அருட்பணி நித்திய ஜீவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெகதீஸ்வரன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் அன்று ராஜன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன், வைத்திய கலாநிதி ஒஸ்மன் சாள்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கிராம மக்கள் அயல் கிராம மக்கள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த புனித தோமையார் வாசாப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புனித தோமையார் வாசாப்பு’ நாடகம் கத்தோலிக்க பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றாகும். புனித தோமையாரின் வரலாறு மற்றும் அவரின் விசுவாசப் பணிகளை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









