பாரிய கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை தனமல்வில ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகஹகந்த வனப்பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, குறித்த கஞ்சா தோட்டத்தில் பல்வேறு உயரங்களில் செழிப்பாக வளர்க்கப்பட்டிருந்த ஏராளமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து கஞ்சா செடிகளும் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோது சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.