இலங்கை இளைஞர்கள் ரஷ்யாவில் சிறைப்பிடிப்பு.!
ரஷ்யாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, இலங்கை இளைஞர்களிடம் பல இலட்சம் ரூபாய்களை மோசடி செய்து, அவர்களை ரஷ்யாவில் ஆதரவற்றுத் தவிக்க விட்டுள்ள அதிர்ச்சிகரமான மனித வர்த்தகச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தம்புள்ளை, பிரிவென சந்தி பகுதியைச் சேர்ந்த கீர்த்தி விக்கிரமசிங்க என்பவரும், ரஷ்யாவில் வசிக்கும் அவரது உறவினரான லஹிரு பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவியும் இணைந்து இந்த சட்டவிரோத வேலைவாய்ப்பு மோசடியை நடத்தி வந்துள்ளதாகத் தெரியவருகிறது.
சாக்லேட் நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒருவரிடமிருந்து 18 இலட்சம் முதல் 21 இலட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு, பல மாதங்களுக்கு முன்பு இவர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா சென்று ஒரு மாதத்திற்குள் அவர்களுக்கு முறையான வேலை விசாக்கள் இல்லை என்பதும், வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
தங்களது வீடுகள், காணிகள் மற்றும் வாகனங்களை அடமானம் வைத்தும், அதிக வட்டிக்குக் கடன்களைப் பெற்றுமே இவர்கள் ரஷ்யா சென்றுள்ளனர்.
எனினும், தற்போது அவர்கள் ரஷ்யாவில் உள்ள பண்ணை ஒன்றில், மரத்தால் செய்யப்பட்ட சிறிய கொட்டகை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சம்பளமோ, உணவோ, சரியான உடைகளோ மற்றும் குடிப்பதற்குக் கூடப் பாதுகாக்கப்பட்ட நீரோ இன்றி, ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு ஒப்பான நிலையில் அவர்கள் அங்கே கொடூரமான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
எந்தவித கூலியும் வழங்கப்படாமல், அப்பண்ணையில் அவர்களிடம் வலுக்கட்டாயமாக வேலை வாங்கப்படுவதாகவும், அங்குள்ள போர்ச் சூழலுக்கு மத்தியிலும் உயிருக்குப் பயந்த நிலையில் வாழ்ந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காணொளி வழியில் ஆதாரங்களை வெளியிட்டு அழுது புலம்பியுள்ளனர்.
இவ்வாறு மாத்தறை கம்புருபிட்டியவைச் சேர்ந்த ஜீவன் உதேஷ் ஜயசிங்க, கண்டியைச் சேர்ந்த சுரஞ்ஜித் விஜய பண்டார, தம்புள்ளையைச் சேர்ந்த ரோஹண ஜயரத்ன மற்றும் ராஜபக்ஷ, மாவனெல்லையைச் சேர்ந்த லக்ஷ்மன் சமரகோன், கெகிராவவைச் சேர்ந்த சுபுன் ஜயவீர, வெலிகமையைச் சேர்ந்த கேஷர தீரங்க உள்ளிட்ட பல இலங்கை இளைஞர்கள் அங்கு வீசா மற்றும் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர்.
இது குறித்து தம்புள்ளையிலுள்ள கீர்த்தி விக்கிரமசிங்க என்பவரின் வீட்டிற்கு ஊடகவியலாளர்கள் நேரடியாகச் சென்று வினவியபோது, ரஷ்யாவிலுள்ள தனது உறவினரான லஹிரு என்பவருடன் இணைந்து தாம் இந்த வேலைவாய்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதையும், பணம் பெற்றுக் கொண்டதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன், இதேபோன்று மேலும் 32 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலைவாய்ப்பு வழங்காமல் ஏமாற்றியுள்ளமையும் இதன்போது அம்பலமானது.
தொலைபேசி வாயிலாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கீர்த்தி விக்கிரமசிங்கவிடம் நியாயம் கேட்டபோது, “தனது காணியை விற்று விரைவிலேயே அவர்களை இலங்கைக்கு அழைத்துக் கொள்வதாக” வழக்கமான சாக்குப்போக்கையே மீண்டும் கூறியுள்ளார்.
கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளுடன் விளையாடி, சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டங்களை மீறி இந்தச் சட்டவிரோதக் கும்பல் இன்னமும் பகிரங்கமாகத் திரிவதாகப் பொதுமக்கள் சாடுகின்றனர்.
எனவே, இந்த விவகாரத்தில் தற்போதைய இலங்கை அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு, ரஷ்யாவில் தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை உடனடியாக இலங்கைக்கு மீட்டெடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு அங்கு முறையான விசா மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
