யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!
இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின்போது பயணித்த பெண் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை உணர்ந்தார்.
அதன்பின்னர் அவர் வழிநெடுகிலும் சென்று பார்த்த போதும் சங்கிலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இனிச் சங்கிலி கிடைக்காது என்ற கவலையோடு, மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே அதே பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பேருந்தின் நடத்துநருக்கும், சாரதிக்கும் தெரியப்படுத்தியபோது அவர்கள் ‘நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்து பத்திரமா வைத்திருக்கிறோம்’ என்று கூறி அதனை ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பேருந்தை சுத்தம் செய்தபோது, அந்தச் சங்கிலியின் ‘எஸ்’ வடிவிலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும் உரிய பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு தாம் கண்டெடுத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து உரியவர்களிடம் சேர்ப்பித்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதியான மனோகரன் சயந்தன், நடந்துநரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப் பண்பை பேருந்தில் இருந்தவர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

