நிரம்பி வழியும் நிலையில் உள்ள நீர்த்தேக்கங்கள்.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலைய நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
இன்று காலை (07) 06.00 நிலவரப்படி, லக்ஷபானா நீர்மின் வளாகத்தின் இரண்டு பெரிய நீர்த்தேக்கங்களான மவுசாகலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்கள், முறையே நிரம்பி வழியும் அளவை விட சுமார் 02 அடி மற்றும் ஒன்றரை அடி குறைவாக இருந்ததாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நீர் ஏந்து பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, லக்ஷபானா, விமலசுரேந்திரா, கென்யோன் மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அவ்வப்போது தன்னியக்கமாக நீர் நிரம்பி வழிகிறது.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், தேசிய நீர்மின் அமைப்பைச் சேர்ந்த லக்ஷபான, நவ லக்ஷபான, விமலசுரேந்திரா, கென்யோன், பொல்பிட்டியா, பிராட்லாண்ட் மற்றும் மேல் கொத்மலை கலுகலை ஆகிய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் அதிகபட்ச மின் உற்பத்தி பெறப்படும் என்று நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர்.
மலைகளில் உள்ள நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதால் களனி ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், ஆற்றின் இருபுறமும் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு நுவரெலியா மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
