யாழில் கேரளா கஞ்சா கைப்பற்றல்.!
யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோகிராம் கேரளா கஞ்சாவில் 16 கிலோ கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வல்லிபுரம் கடற்கரைப் பகுதி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு இந்தக் கேரளா கஞ்சா கடந்த வாரம் கடத்திச் வரப்பட்டதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளிலும் வடமராட்சிப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில், நெல்லியடி பகுதியில் உள்ள பற்றைக்காடுகளுக்குள் கஞ்சா பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், அதனை கைப்பற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட பொதி 16 கிலோகிராம் எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சாவை சிறு சிறு பொதிகளாக வடமராட்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு கடத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும் விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த கஞ்சா தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.