கல்முனையில் Shell எரிபொருள் நிரப்பு நிலையம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிலையத்தினை, அமெரிக்காவின் ‘ஆரெம் பார்க்ஸ்’ (RM Parks Inc.) நிறுவனம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்று இன்று (30) திறந்து வைத்தது.
மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், RM Parks Pvt Ltd மற்றும் Shell நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எல். எட்வர்ட் சுசந்த சில்வா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் பாதுகாப்பு முகாமையாளர், பிராந்திய முகாமையாளர் எம். குகராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இப் பகுதியில் அமைந்துள்ள சி.பி. ஹாலித் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய ‘ஷெல்’ (Shell) எரிபொருள் நிலையத்தின் முகவராகச் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நிலவிய கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடிக்குத் தீர்வாகவும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையிலும் சில்லறை எரிபொருள் விற்பனைச் சந்தையை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘ஆரெம் பார்க்ஸ்’ நிறுவனம், உலகின் முன்னணி ஆற்றல் நிறுவனமான ‘ஷெல்’ (Shell PLC) உடன் இணைந்து இலங்கையில் 20 ஆண்டுகால குத்தகை அடிப்படையில் காலடி எடுத்து வைத்துள்ளது.
இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சுமார் 110 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இச்செயற்றிட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (CPC) 150 எரிபொருள் நிலையங்கள் பொறுப்பேற்கப்படுவதுடன், புதிதாக 50 நிலையங்களை அமைக்கும் உரிமையையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
பொறுப்பேற்கப்படும் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பின்வரும் நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன:
தானியங்கி விநியோகக் கருவிகள் (Automated Dispensers)
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் (EV Charging Stations)
மினி சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கஃபேக்கள்
வங்கி ATM மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட சேவைகள்
இப்புதிய நடவடிக்கையின் மூலம் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்குச் சர்வதேச தரத்திலான சேவைகளும் தடையின்றி கிடைக்கும் என நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












