மஸ்கெலியா தெய்வகந்த பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானப்பணி முன்னெடுப்பு
மஸ்கெலியா சாமிமலை தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்தின் பதில் கடமை அதிபர் திருமதி.மாக்ரட் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் புஸ்பகுமார அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் சிரமதானப்பணி ஒன்று இன்று காலை (29/07/2026) 10.00மணியளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
தெய்வகந்த பிரஜா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி புவிதாஸ் அவர்களின் வழிநடத்தலில் பிரஜா பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பாடசாலை சுற்றுச்சூழலை சுத்தம் செய்தனர்.
இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கின்ற டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த செயற்திட்டம் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிறப்பான சமூகப் பணியில் கலந்து கொண்டு சிரமதானப்பணியை செய்து தந்த மஸ்கெலியா பொலிஸ் மற்றும் பிரதேசவாசிகள் பழைய மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிப்பதாக தெய்வகந்த பாடசாலையின் பதில் கடமை அதிபர் திருமதி.மாக்ரட் அவர்கள் தெரிவித்தார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த வாரத்திலேயே நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான இரண்டாவது சிரமதானப்பணி இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய வரையறைக்குள் இருக்கின்ற சகல பகுதிகளிலும் இவ்வாறான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் அடுத்து வருகின்ற நாட்களில் திட்டமிட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிசுகத் புஸ்பகுமார அவர்கள் கருத்து தெரிவித்தார்.








