பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெறும் சீனத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!
தனது சேவைக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டைவிட்டுப் பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைக் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தனது பதவிக் காலத்தில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தச் சீனத் தூதுவர் ஆற்றிய பங்களிப்புக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பினரும் நீண்டகால இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள், வர்த்தகம், அபிவிருத்தி உதவிகள் மற்றும் எதிர்காலத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவுகளைத் தொடர்வதன் முக்கியத்துவம் குறித்தும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே எப்போதுமொரு ஆக்கப்பூர்வமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையைப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் இந்தச் சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தினார்.