வைத்தியசாலைக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விலைமனுக்கோரல்; இலஞ்சம் பெற்ற இருவர் கைது.!
பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விலைமனுக்கோரல் தொடர்பான விவகாரத்தில், 20 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியமை, பெற்றுக் கொண்டமை மற்றும் அதற்குத் தூண்டுதலாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தொழிலதிபர் ஒருவர் உட்பட இருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமாவின் பெயர்களில் புதிய டெண்டர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதைத் தவிர்த்து, 2027 ஆம் ஆண்டிற்கான டெண்டர் முறைப்பாட்டாளருக்கே கிடைப்பதை உறுதி செய்வதற்காக, சந்தேகநபர்கள் ஆரம்பத்தில் 30 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பின்னர் இந்த இலஞ்சத் தொகை 25 இலட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டு, இறுதியில் 20 இலட்சம் ரூபாயாக பேசி முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதனடிப்படையில், கம்பளை அஞ்சல் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து 20 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டபோது கம்பளைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் மற்றுமொரு நபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.