மலையக மக்களின் காணி உரிமை கேள்விக்குறியாகியுள்ளது – பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டல்!
தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட பொதுக்கூட்டம் இன்று (ஹட்டனில்) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், கௌரவ முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளரும் உறுப்பினருமான M. நகுலேஸ்வரன், உயர்மட்ட உறுப்பினர்கள், நிர்வாக சபையினர், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், தலைவிகள், அங்கத்தவர்கள், பணிமனை உத்தியோகஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் எதிர்கால அரசியல் திட்டங்கள், புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய தலைவர் பழனி திகாம்பரம், தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
“நடப்பு அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றியுள்ளதா என்பதில் மக்கள் மத்தியில் பெரும் கேள்வி எழும்பியுள்ளது.
அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகளால் மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
குறிப்பாக, மலையக மக்களின் நீண்டகாலக் கனவான காணி உரிமை விவகாரம் இன்று இழுபறியான நிலைக்குத் தள்ளப்பட்டு, கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன
இதனால், புதியதொரு அரசியல் மாற்றத்தின் அவசியத்தை மலையக மக்கள் தற்போது ஆழமாக உணரத் தொடங்கியுள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஸ்தாபன ரீதியாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய மலையகக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பழனி திகாம்பரம் முன்னிலையில் தங்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்