ஆட்சியைத் தக்கவைக்க தினந்தோறும் மக்களை ஏமாற்றும் என்.பி.பி. அரசு.!
திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத் தக்கவைக்கத் தினமும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
டித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக் கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வின்போது ரூபா 2 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா பெறுமதியான 100 சீமெந்து பொதிகளையும் அவர் அன்பளிப்பாக வழங்கினார்.
விவசாயிகளை “கடவுள்” என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் உத்தரவாத விலை தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து “கசிப்புக்காரன்” என்று அவமதிக்கின்றனர் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபாய் செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும், 120 ரூபாய் விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசுக்குச் சொந்தமான நெல் களஞ்சியங்கள் வெளிநாட்டு அரிசியால் நிரப்பப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.









