ஆபத்தின் விளிம்பில் லோனாக் பிரதான வீதி.!
அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட ஹட்டன் பெருந்தோட்ட சபைக்கு உரித்தான லோனாக், மீனாட்சி, கிளர்மென்ட் ஆகிய மூன்று தோட்டங்களுக்கு செல்லும் பிரதான வீதி கடந்த பத்து வருடங்களாக குன்றும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் இருப்பதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சுமார் 500 குடும்பங்கள் வாழும் இந்த பிரதேசமானது வட்டவளை நகருக்கு செல்லும் பிரதான வீதியின் 7 கிலோமீற்றர் தூரத்தை இங்கு வாழும் மக்கள் நாளாந்த கடமைகளை நிறைவேற்ற பயன்படுத்துகின்றனர்.
இப் பிரிவிலிருந்து ஹட்டன் போஸ்கோ ஹை லென்ஸ் செனான் குயில்வத்தை வட்டவலையில் உள்ள பாடசாலைகளுக்கு நாளாந்தம் 40க்கும் மேற்பட்ட தரம் ஒன்று முதல் கா.பொ.த உயர்தரம் வரை கல்வி பயிலும் மாணவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வீதி சேறும் சகதியுமாக காணப்படுவதால் மாணவர்கள் சொல்லனா துயரத்தை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில் வீதியின் சீர்கேடு காரணமாக கர்ப்பிணி தாய்மார்கள் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லும் போதே குழந்தையை பிரசவித்த சம்பவங்களும், நோயாளிகளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னர் மரணித்த சோகமான சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இச்சாலை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்புடன் 2015 ஆம் ஆண்டு வட்டவளை நகரத்திலிருந்து அகரவத்தை velioya பிரதான வீதியின் 9.5 கிலோமீற்றர் செப்பனிடப்பட்டது.
இதில் அகரவத்தையிலிருந்து லோனாக் செல்லும் பிரதான வீதியின் 4 கிலோமீற்றர் தூரம் இதுவரை புனரமைக்கப்படாமைக்கான காரணம் என்ன என பொதுமக்கள் தங்களது கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
அத்தோடு இவ் வீதியில் மூன்று பிரதான பாலங்கள் அண்மைக்காலமாக பெய்த கடும் மழையினால் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீதி தொடர்பாக பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் காலங்களில் மாத்திரம் வருகை தரும் மலையக அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகளை அளித்து தேர்தல் முடிந்தவுடன் இவர்களின் வாக்குறுதி காற்றோடு பறந்து விடுகிறது.
கடந்த பத்து வருட காலமாக இவ் வீதி தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் தெரியப்படுத்தியும் மலையக தலைமைகள் மௌனம் காப்பது பெரும் வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே புதிதாக ஆட்சிப்பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலாவது இவ் வீதிக்கு விடிவுகாலம் பிறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.