தோட்டப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜாமணி பிரசாந்த் நேற்று (15) இடம்பெற்ற சபையின் மாதாந்த அமர்வில் விஷேட உரை நிகழ்த்துகையில் தெரிவித்தார்.
தலைவர் உட்பட 14 உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவர் மேலும் பேசுகையில்,
கொரோனாவை அடையாளம் கண்டது போல, டெங்கு நோயை இலகுவாக கண்டு கொள்ள முடியாதுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சலில் படுக்கும் போதுதான் தெரியவருகின்றது. இலங்கையில் கொழும்பில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். மத்திய மாகாணத்தில் கண்டியிலும் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் டெங்கு நோயில் பீடிக்கப்பட்டுள்ளதோடு, இறந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளது. எனவே, நாமும் டெங்கு நோய்த் தொற்றிலிருந்து எம்மை காப்பாற்றிக் கொள்ள வீடுகள், சுற்றுப்புறங்கள், பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
கொட்டகலை நகர்ப் பகுதிகளில் பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், மற்றும் பொலிசாருடன் இணைந்து சிரமதானப் பணியை மேற்கொண்டிருந்தோம். அதேபோல், எமது பிரதேச சபை நிர்வாக எல்லைக்குட்பட்ட வட்டகொடை நகரத்தையும் அண்டிய பகுதிகளையும் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது உறுப்பினர்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எமது பிரதேச சபையின் ஊடாக அனைத்து வட்டாரங்களையும் சேர்ந்த தோட்டங்களுக்கும் டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். டெங்கு நோய் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பிரச்சினை அல்ல: இது ஒரு சமூகப் பிரச்சினையாகும். எனவே அதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. இதற்கான வேலைத்திட்டம் கொட்டகலை சுகரதார வைத்தியரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு அரசாங்க மட்டத்திலான உதவியும், நலன் விரும்பிகள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் பெற்றுக் கொள்ளப்படும்.
கொட்டகலை நகரில் உள்ள இரண்டு பேருந்து தரிப்பு நிலையங்களில் பிரதேச சபையின் அனுமதி பெறாமல் கண்டபடி சுவரொட்டிகளை ஒட்டி குப்பைகள் சேர்வதற்குக் காரணமாக உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், கொட்டகலை தகனசாலை வளாகத்தில் வைக்கப்படும் நினைவு சின்னங்கள், பூந்தொட்டிகள் போன்றவற்றைப் பராமரிக்க பிரதேச சபை உறுப்பினர்களின் அனுமதியோடு, பிரதேங்களை தகனம் செய்ய வருவோரிடம் குறிப்பிட்டளவு கட்டணத்தை அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஏரியை சுற்றலாப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தவும் படகு சவாரி, குதிரை சவாரி போன்றவற்றை நடத்தி சபைக்கு வருமானம் தேடிக் கொள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.


