உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நல்லது நடக்கும் என நம்பி அரக்கர்களுக்கே பேராதிக்க அதிகாரத்தை வழங்கிய மக்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
52 பார்வைகள்

“இந்த நாட்டுக்கு ஏதேனும் நல்லது நடக்கும் என்ற அதீத எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தங்களுக்குத் தாங்களே அரக்கர்களுக்கே வாக்களித்து நாட்டை ஆளும் பேராதிக்க அதிகாரத்தை வழங்கியுள்ளனர்” – என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர விமர்சித்துள்ளார்.

காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“மக்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் தலைகீழான மற்றும் ஆபத்தான ஒரு நிலைமையே இன்று நாட்டில் அரங்கேறி வருகின்றது. நாம் எப்போதுமே மீளெழ முடியாத ஒரு மோசமான பொருளாதாரப் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் கடினமானதாகவும், சொல்லொணாத் துயரம் நிறைந்ததாகவும் மாறியிருக்கின்றது.

நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் எந்தப் புள்ளிவிவரத் தரவுகளையும், போலியான கணக்குகளையும் காட்டி நிலைமையைச் சமாளிக்க முயன்றாலும், இன்று மக்களின் உண்மையான வருமானம் மற்றும் கொள்வனவுச் சக்தி குறைந்தது மூன்றில் இரண்டு பங்காக வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் என்னதான் சாதகமான அறிக்கைகளைக் கூறினாலும், அடிமட்ட யதார்த்தத்தை மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் நன்றாகவே அறிவர்.

எமது சர்வஜன அதிகாரம் கட்சியானது வெறும் அரசியல் அவதூறுகளைப் பரப்பாமல், பிரச்சினைகளுக்குத் தர்க்கரீதியான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்கின்ற ஒரு முற்போக்கான அரசியல் சக்தியாகவே செயற்படுகின்றது. இன்று இலங்கையின் ஒட்டுமொத்த உழைக்கும் விவசாயிகள் குல ரீதியாக அவமதிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து பொன்னி சம்பா அரிசியை அள்ளிக் குவித்து இறக்குமதி செய்து, எமது பாரம்பரிய உள்நாட்டு விவசாயச் செழிப்பையும், மக்களின் ஆன்ம சக்தியையும் திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றார்கள்.

மறுபுறம், சர்வதேச சமூகத்தையும் பிரிவினைவாத சக்திகளையும் சந்தோஷப்படுத்துவதற்காக, அன்று எமது தாய்நாட்டைப் பயங்கரவாதத்திடம் இருந்து உயிரைப் பணையம் வைத்துப் பாதுகாத்த எமது முப்படை இராணுவ வீரர்களை இன்று தண்டிக்கும் இழிவான நிலைமைக்குக் கொண்டுவந்திருக்கின்றார்கள்.

முழு உலகமும் மதித்த, எமது நாட்டுக்குப் பெரும் கௌரவத்தையும், வரலாற்று வெற்றியையும் தேடித்தந்த ‘அட்மிரல் ஒஃப் த ப்ளீட்’ வசந்த கரன்னாகொட போன்ற உன்னத தலைவர்களை இன்று நீதிமன்றங்களுக்கு இழுத்துச் சென்று பழிவாங்கும் நோக்குடன் அவமதிக்கும்போது எமது இதயம் மிகக் கடுமையாக வேதனைப்படுகின்றது. தற்போதைய தலைவர்கள் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அவர்கள் முன்னிலையில் வீரவசனம் பேசலாம். ஆனால், இங்கு உள்நாட்டில் எமது போர் வீரர்களை வேட்டையாடுவது தாய்நாட்டுக்குச் செய்யும் அப்பட்டமான துரோகமாகும்.

எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உலகத்தின் முன்னிலையில் எவ்வித அச்சமுமின்றிப் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு சுயாதிபத்திய நாட்டை உருவாக்க வேண்டும். எமது சொந்தப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்த செழிப்பான எதிர்காலத்தையும், மகிழ்ச்சியானதொரு சமூகத்தையும் உருவாக்குவதே சர்வஜன அதிகாரத்தின் ஒரே இறுதி எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0