தமிழரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்வு.!
மலர்ந்திருக்கும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்று புத்தாண்டு நிகழ்வுகளும், பாரம்பரியக் கைவிசேடம் வழங்கும் நிகழ்வும் மங்கலகரமான முறையில் நடைபெற்றன.
புத்தாண்டு சுபநேரத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றப்பட்டு, புத்தாண்டு வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
புத்தாண்டின் விசேட அம்சமான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இதன்போது வெகு சிறப்பாக இடம்பெற்றது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்களால் அங்கத்தவர்கள் மற்றும் வருகை தந்திருந்த பொதுமக்களுக்குக் கைவிசேடம் வழங்கி வைக்கப்பட்டது. இது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
நிகழ்வில் கலந்துகொண்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், தமிழ் மக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், புத்தாண்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெற்றியடையவும், சமூகத்தில் சுபீட்சம் நிலவவும் தமது விருப்பங்களை வெளியிட்டனர்.


