இலங்கை பெண்ணை தாக்கிய உக்ரைன் நாட்டுப் பெண் விளக்கமறியலில்.!
கல்கிசையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டுப் பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி இரவு, கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது, இலங்கை பெண் ஒருவரைத் தாக்கியதுடன், கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டதாகவும், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இரவு கண்காணிப்பு பணியில் இருந்த அதிகாரிகளால் குறித்த பெண் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த பெண்ணை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இலங்கை பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், கைது செய்யப்பட்ட உக்ரைன் நாட்டுப் பெண் கடந்த 12 ஆண்டுகளாக இலங்கையில் வசித்து வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.