கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: இஷாரா செவ்வந்தி விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்ற உத்தரவு.!
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் கடும் அறிவுறுத்தல் வழங்கியது.
இவ்வழக்கின் 15வது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாததை நீதிவான் சுட்டிக்காட்டியதுடன், “சந்தேகநபரைத் தடுத்து வைத்திருப்பதில் மட்டுமே பயன் இல்லை; முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்” எனதெரிவித்தார்.
மேலும், ஆரம்ப விசாரணைகளின் போது சந்தேகநபர் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது விசாரணையில் தேக்கநிலை காணப்படுவதாகவும் நீதிமன்றம் கவனம் செலுத்தியது.
இஷாரா செவ்வந்தி தனது இரண்டாவது 90 நாள் தடுப்புக்காவல் காலத்தையும் கடந்துள்ள நிலையில், அவரைச் சார்ந்த முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.இன்றைய விசாரணையின் போது சந்தேகநபர்கள் காணொளி தொடர்பு முறையின் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.