சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை.!
சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அசங்க எஸ். போதராகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், சந்தேகநபருக்கு தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டதுடன், வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.2015 முதல் 2026 வரை வருமானத்திற்குப் புறம்பாகச் சேர்த்ததாகக் கூறப்படும் சொத்துகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதில், குடும்பத்துடன் பல முறை வெளிநாட்டு பயணங்கள், மனைவியின் வங்கிக்கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் இருப்பது மற்றும் கோடிக்கணக்கான பெறுமதியுள்ள வணிக முயற்சி ஆகியவை அடங்கும்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க கோரிக்கை விடுத்திருந்தபோதிலும், பாதுகாப்பு தரப்பின் பிணைக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்க உத்தரவிட்டார்.