பெண்கள் கடத்தப்பட்டு கொ*லை; அடையாள அணிவகுப்பில் சிக்கிய சந்தேகநபர்கள்.!
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்கள் கடத்தப்பட்டு நகைகள் கொள்ளையிடப்பட்டு கிணறுகளில் வீசப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மூடிய நீதிமன்றில் அடையாள அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்கள் மூன்று பேர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு மூடிய அறைகளுக்குள் சாட்சியான கடத்தப்பட்டு கிணற்றில் போடப்பட்டு உயிருடன் மீட்கப்பட்ட பெண் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடாத்தப்பட்டது.
இதன்போது முதலாவது அடையாள அணிவகுப்பில் முதலாம், இரண்டாம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இரண்டாவது அடையாள அணிவகுப்பில் மூன்றாவது நபர் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாபுலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும் இளம்தாயின் 3 வயது சிறுமி கொத்தியாபுலை வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ன ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை முன்னெடுத்தனர்.
இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் மயக்க மருந்துகளைப் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி சாரதி உட்பட உட்பட ஆறு பேரை 24 மணித்தியாலயத்தில் பொலிசார் கைது செய்துடன் இரு முச்சக்கரவண்டிகள், கார் ஒன்று மற்றும் கோடரி, கூரிய ஆயுதங்களையும் மீட்டனர்.
இதேபோன்று மயக்க மருந்துகளை வழங்கியதாக தெரிவிக்கப்படும் ஏழாவது சந்தேக நபரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் விசாரணை செய்வதற்கு நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலிருந்து சென்ற கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கொழும்பு, வத்தளை பகுதியில் வைத்து மயக்க மருந்துகளை விநியோகம் செய்த நபரை கைது செய்திருந்தனர்.
விசாரணையின் பின்னர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.தர்சினி அவர்களின் அறையில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஏழாவது சந்தேக நபருடன் முதலாவது சந்தேக நபரும் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் மூடிய நிலையில் நீதிமன்றுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது கொக்கட்டிச்சோலை பொலிஸார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஏழாவது சந்தேக நபரை எதிர்வரும் 02ஆம் திகதி வரையில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதியளித்தார்.
இது தொடர்பான தொடர் விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


