மேலும் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்.!
இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடித்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவித்தலின்படி, பொதுப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பொது அமைதியைப் பேணுதல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுப்பதற்கு இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு அவசியமானது என்று அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையிலோ அல்லது ஜனநாயகத்துக்குப் புறம்பாகவோ பயன்படுத்தப்பட மாட்டாது என்று ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.