நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சுமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை பொலிஸார் நேற்று மாலை சுற்றிவளைத்தனர் .
இச்சுற்றிவளைப்பு தேடுதலின் போது 8 பரள்களில் 800 லீற்றர் கோடா மற்றும் 160 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பெருமளவு உபகரணங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும், பரள்கள், போத்தல்கள் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


