மட்டக்களப்பில் இளம் பெண் படுகொலை: நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி.!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில், பாழடைந்த கிணற்றில் காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு பெண்ணும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண், கடந்த 28.02.2026 முதல் காணாமல் போயிருந்த மண்முனை நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த நளாயினி என அவரது குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திருப்தியாக ஆறுதல் தெரிவித்தார். குடும்பத்தினர், “இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு சார்பாக எந்தவொரு சட்டத்தரணிகளும் ஆஜராகக் கூடாது” என்று கோரிக்கை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 27.03.2026 காலை 08.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலிருந்து மட்டக்களப்பு கச்சேரி வரை, மண்முனை நாற்பதாம் கிராம மக்களால் நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறியதாவது:“
எமது பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தக் கொடூரச் சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண் காணாமல் போனதாகத் தகவல் வந்த பின்னரும், காவல்துறை தாமதமாக விசாரணை மேற்கொண்டுள்ளது. காவல்துறை அலட்சியம் அடுத்தடுத்த குற்றச்செயல்கள் மற்றும் கொலை முயற்சிகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு நீதியான தீர்ப்பு கிடைக்க வேண்டும். ஆகையால், நாளை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு பேரணியில் நானும் கலந்து கொள்வேன்.”