ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய பலநாள் மீன்பிடி படகு.!
பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பலநாள் மீன்பிடி படகு இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
போதைப்பொருள் அடங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் உரமூடைகளை ஏற்றிச் சென்ற உள்நாட்டுப் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 5 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பலநாள் மீன்பிடி படகு கரைக்கு கொண்டுவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் அதில் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
