மாகாண சபைத் தேர்தல் இந்த ஆண்டுக்குள் நடத்த வாய்ப்பு – ரத்நாயக்க தெரிவிப்பு.!
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தால், இந்த ஆண்டுக்குள்ளேயே தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவி வரும் தாமதம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை கூறினார்.
2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமையில் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் கடந்த பல ஆண்டுகளாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கி வருகின்றன.பழைய விகிதாசார முறைமையில் தேர்தலை நடத்தலாமா அல்லது புதிய கலப்பு முறைமையில் நடத்தலாமா என்பது குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே விளக்கம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் முறைமை மற்றும் சட்ட திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு, எதிர்வரும் மே மாதத்துக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அந்தக் குழுவின் முன் தேர்தல்கள் ஆணைக்குழு சார்பான யோசனைகளையும் முன்வைக்கத் தயாராக உள்ளதாகவும், அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையும் வரை குறைந்தபட்சம் பழைய விகிதாசார முறைமையிலாவது தேர்தலை நடத்தி, மாகாண சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் ஆணைக்குழு உறுதியாக உள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
விசேட தெரிவுக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், சட்ட ரீதியான அதிகாரங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும் என்றும், இதன் மூலம் நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தலாம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.