தங்கக் கடத்தலை அதிரடியாக முறியடித்த கடற்படை.!
யாழ்ப்பாணம், மாதகல் கடல் வழியாகப் படகு மூலம் இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 6 கிலோவுக்கும் அதிக எடையுடைய தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
மாதகல் கடற்பரப்பினூடாகச் சர்வதேச கடல் எல்லை வழியாகத் தங்கம் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை நடுக்கடலில் வழிமறித்துச் சோதனையிட்டனர்.
கடற்படையினரின் தீவிர சோதனையின் போது, அந்தப் படகிலிருந்து 6 கிலோ 85 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கடல் மார்க்கக் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடக்குக் கடற்பரப்பில் கடற்படையினர் தமது கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.