அரச பேருந்து சேவையில் ஈடுபடாமையால் பாடசாலை மாணவர்கள் அவதி.!
சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் 6.15 மணிக்கு ஹட்டன் நோக்கி செல்லும் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து சேவைகள் கடந்த ஒரு வார காலமாக சேவையில் இல்லாததால் சாமிமலை பகுதியில் உள்ள 5 பெருந்தோட்ட தொழிலாளர்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள், 2 கிராமத்தில் உள்ள மக்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பயணிகள், நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,
எமது அரச பேருந்து நிலையத்தில் போதுமான சாரதிகள் நடத்துனர்கள் மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. இது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலன் இல்லை என்று தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலைய குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்து தர முன்வர வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.