கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!
வாழ்வியலும் சுகாதாரமும் என்ற அடிப்படையில் மஸ்கெலியா பிரதேச சபையால் நேற்று 06.03.2026 மஸ்கெலியா ரிக்காடன் பகுதியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் மஸ்கெலியா பிரதேச சபை கௌரவ தவிசாளர் கந்தையா ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தற்போது அம்பகமுவ, மஸ்கெலியா, நல்லதண்ணீர், சாமிமலை போன்ற பகுதிகளில் இருந்து கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதனை மேலும் மேம்படுத்தும் வகையில் ஹட்டன் பிரதேசத்தில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளையும் ரிக்காடன் கழிவு முகாமைத்துவ மையத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்த கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உர வகைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குறைந்த விலையில் வழங்குவது குறித்தும் முக்கியமாக பேசப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் உதவி ஆணையாளர், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி, மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், உதவி தவிசாளர் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர், சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது.
கடந்த பல ஆண்டுகளாக ஹட்டன் நகரில் உள்ள கழிவுகள் முகாமைத்துவத்தில் தீர்வு காண முடியாதுள்ளது. அதனைத் தீர்த்து வைக்கும் வகையில் ஹட்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சேரும் உக்கும், உக்கா கழிவுகள் அனைத்தும் மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் ரக்காடு கிராமத்தில் அமைந்துள்ள கழிவுகள் தரம் பிரிக்கும் நிலையத்திற்கு பொறுப்பேற்பது என தீர்மானம் செய்யப்பட்டது.
இதனால் ஹட்டன் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்ற உக்கும், உக்கா பொருட்களை அகற்றி ஹட்டன் நகரைச் சுத்தமாக வைத்துக் கொள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.



