ஜனாதிபதி தலைமையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி ஆரம்பம்.!
இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இரத்மலானை இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.
நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி, முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, வான் சாகச நிகழ்வுகளையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் சிறப்பு நினைவுக் குறிப்பை பதிவு செய்த ஜனாதிபதிக்கு, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நினைவுப் பரிசை வழங்கினார்.
விமானப்படையின் 75 ஆண்டுகால சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்பம் தொடர்பான பல அரங்குகள் இடம்பெற்றுள்ளன. விமானப்படை விமானங்களை அருகில் சென்று பார்வையிடவும், அவற்றின் தொழில்நுட்ப விவரங்களை அறியவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், மோப்ப நாய்களின் நிகழ்ச்சிகள், மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்புக் காட்சிகள், பராசூட் காட்சிகள், அங்கம்பொர சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று முதல் நாளை வரை, தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.நிகழ்வில் பல உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டனர்.

