டிக்கோயா வைத்தியசாலையில் சடலத்திற்கு துஷ்பிரயோகம் – மூன்று ஊழியர்களுக்கு எதிராக விசாரணை.!
டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி இன்று (06) விசேட கருத்து வெளியிட்டார்.
அவர் தெரிவித்ததாவது, சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் தினத்தில் இரவு வேளையில் சவ கிடங்கிற்குள் மூன்று ஊழியர்கள் நான்கு தடவைகள் நுழைந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, அறிவியல் ரீதியான விசாரணைகளும் பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலங்களை முறையாககுளிரூட்டிகளில் வைக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
குற்றம் உறுதியாகின், குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், வைத்தியசாலை கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைய விடமாட்டோம் என்றும் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்தார்.
