தவிக்கும் இலங்கையர்களை உடனே தேடிக் கண்டறியுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடும் உத்தரவு.!
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் யுத்தச் சூழ்நிலை காரணமாக அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகள் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தூதரகங்கள் மூலம் 24 மணிநேர அவசர சேவை மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அவை வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரை பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், நாடு திரும்ப முடியாமல் உள்ளவர்களை மீண்டும் அழைத்து வர தேவையான வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.விமான சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதால் தேவையான வசதிகளை வழங்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

