ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு.!
கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த ஈரானின் இரண்டாவது கப்பலை இலங்கை பொறுப்பேற்று திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், என்ஜின் ஒன்று செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டுவராமல், திருகோணமலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.
இது யாருக்கும் போர் ரீதியான உதவி அல்ல என்றும், மனித உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகள் அடிப்படையில், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதையும், எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அமைதியை விரும்பும் நடுநிலையான நாடாக மனிதாபிமான அடிப்படையில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், கப்பலில் சிறுவர்கள் இருப்பதாக கூறப்பட்ட செய்திகள் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.