சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மக்களால் முற்றுகை – முல்லையில் அதிரடி நடவடிக்கை.!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி பகுதியில் இடம்பெற்று வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.அப்பகுதியில் சிலர் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை நிறுத்துமாறு பலமுறை எச்சரித்த போதிலும் அவர்கள் நடவடிக்கையை தொடர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இந்த சட்டவிரோத கசிப்பைப் பயன்படுத்தியதால் இளைஞர்கள் மத்தியில் குடும்பத் தகராறுகள் அதிகரித்ததுடன், வீதிப் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல இளைஞர்கள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகள் இணைந்து கசிப்பு உற்பத்தி நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்தனர்.
அப்போது 600 லீற்றருக்கும் அதிகமான கோடா மற்றும் கசிப்பு என்பன மக்கள் கைப்பற்றியுள்ளனர்.பின்னர் கைப்பற்றப்பட்ட பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.