சுரேஷ் சலே கைது விவகாரம்: அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். சுரேஷ் சலேயின் கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியே மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தடுப்புக்காவலில் உள்ள சுரேஷ் சலேவின் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். அவரது உணவில் விஷம் கலந்து கொலை செய்யும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவித்து, வீட்டிலிருந்து சமைத்த உணவை வழங்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.