மஸ்கெலியா பகுதியில் கடும் பனிமூட்டம்; வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை.!
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்படுவதால் பார்வைத் தூரம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மலையகப் பகுதிகளில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் தனியார் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் மின்விளக்குகளை ஏற்றி மிகவும் அவதானத்துடன் வாகனங்களை இயக்குமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கினிகத்தேனை, தியாகலை, நோர்ட்டன் வழியாக சிவனடி பாத மலை நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மிகுந்த கவனத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.