சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பாரிய நீர்த்தேக்கங்களை விடுத்து சிறு குளங்களை புனரமையுங்கள்.!
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பாரிய நீர்த்தேக்கங்களை விடுத்து வன்னியில் காணப்படும் சிறுகுளங்களை புனரமைக்க நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (04/03/2026) நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மேற்படி கோரிக்கையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேலும் பேசுகையில்,
எனது கேள்விக்கு பதிலளித்த விவசாய பிரதி அமைச்சர் அவர்கள் வவுனியா மாவட்டத்தில் மட்டும் 832 பதிவு செய்யப்பட்ட குளங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் நீர்ப்பாசன தேவைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலானவை கமநல சேவைகள் நிலையங்களின் கீழ் பராமரிக்கப்படும் குளங்களாகும். அத்தோடு மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் அவர்கள் 222 கைவிடப்பட்ட குளங்களும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன்
இக்குளங்களிலிருந்து கிட்டத்தட்ட 42,000 ஏக்கர் வயல் நிலங்கள் நீரை பெறுவதாக தெரிவித்தார். எனவே கெளரவ அமைச்சர் கூறிய 222 கைவிடப்பட்ட குளங்களை புனரமைப்பதனூடாக இன்னும் 10,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர்பாசனம் செய்ய முடியும். இதனூடாக காணி அற்றவர்களுக்கு வயல் காணியை வழங்கக்கூடியதாக இருக்கும்.
எமது பிரதேசத்தில் காணப்படும் குளங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு படிமுறை நீர்ப்பாசன அமைப்பின் (Cascade Irrigation System) பகுதியாக காணப்படுகிறது. இந்த படிமுறை நீர்ப்பாசன அமைப்பானது எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். எமது நாட்டின் உலர் வலயத்தில் காணப்படும் மாவட்டங்களில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீர்த்தேக்கம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.
இந் நீர்த்தேக்கத்தில் இருந்து பயிர்ச்செய்கைக்கு நீரை பயன்படுத்துவதற்கு மேலதிகமாக கிராமங்களில் உள்ள கிணறுகளில் நீர் இருப்பதற்கும், கால்நடைகளுக்கான குடிநீரை பெறுவதற்கும் மீன்பிடி போன்ற தொழில்துறைகளை மக்கள் செய்வதற்கும் இந்த நீர்த்தேக்கங்களே மூலாதாரமாக உள்ளது. எனவே இந்த நூற்றுக்கணக்கான எண்ணிக்கையான குளங்கள் புனரமைக்கப்படல் வேண்டும்.
பாரிய நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கு பல மில்லியன் ரூபா நிதியை செலவழிப்பதுடன் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், யானை – மனித மோதலையும் மேலும் வலுவடைய செய்யும் செயற்பாடே நடைபெறுகிறது என தெரிவித்ததோடு எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சிறிய நீர்த்தேக்கங்களை புனரமைக்க கூடிய நிதியை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் தற்போது விவசாயிகளுக்கு 5 ஏக்கருக்கான உரமானியத்தை வழங்குகிறது. அந்த 5 ஏக்கர் வயல் நிலத்திலிருந்து சராசரியாக 10,000 கிலோ நெல் விளைச்சல் கிடைக்கும், ஆனால் நெல் சந்தைப்படுத்தும் சபையானது ஒரு விவசாயியிடம் இருந்து 2500 கிலோ நெல்லையே கொள்வனவு செய்கிறார்கள். எனவே ஒவ்வொரு விவசாயியிடமிருந்து குறைந்தது 5000 கிலோ நெல்லையாவது கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள் சிறு குளங்களை திருத்துவதற்கு எதிர்காலத்தில் கூடிய நிதி ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் நெல் கொள்வனவு செய்யும்போது கூடிய நிறையை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.