எரிபொருள் விநியோகம் தொடர்பாக மன்னாரில் அவசர கலந்துரையாடல்.!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை முன்னிட்டு, எரிபொருள் முகாமைத்துவத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அவசரக் கூட்டம் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், உருவாகியுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு, போக்குவரத்து மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் தொடரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரிகள், பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கமநல அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல துறைச் சார்ந்த அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தற்போதைய நிலைமையை முன்னிட்டு எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதற்கான சில முக்கிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.