“அமெரிக்க ஜனாதிபதியை கண்டு அரசு அஞ்சுகிறதா?” – ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி.!
அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரமழான் நோன்பு என்பது இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமான ஆன்மீக கடமையாகும். இந்நிலையில், நோன்பு காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.அமெரிக்க ஜனாதிபதி மற்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகின்றார் என்றும், உலக நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுகின்றார் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் வேறுபட்ட நிலைப்பாடு எடுத்திருக்கும் என்றும், தற்போது அமைதியாக இருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.அமெரிக்க ஜனாதிபதியை அஞ்சியதால்தானா அரசாங்கம் மௌனம் காக்கிறது எனவும் ரோஹித அபேகுணவர்த்தன மேலும் வினவினார்.