ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம்! மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு.!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 மார்ச் 8 ஆம் தேதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், 2026 மார்ச் 8 அன்று ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டிற்குள் நுழைகிறது.
இதனை முன்னிட்டு, தங்களது உறவுகளை இராணுவத்திடம் கையளித்ததாகக் கூறப்படும் வட்டுவாகல் பகுதியில், எதிர்வரும் மார்ச் 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சங்கத் தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் தங்களது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறினார்.
அதன் பின்னர் உண்மையை கண்டறிதல், பொறுப்பு கூறுதல், மீள நிகழாமை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் நீதி கோரி தொடர்ந்து போராட்டம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், காணாமல் போனோரின் அலுவலகத்திடம் ஐந்து பேரின் விவரங்கள் வழங்கப்பட்டிருந்தபோதும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். இதுவரை 350-க்கும் மேற்பட்ட பெற்றோர், தங்கள் உறவுகளை எதிர்நோக்கிக் காத்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
சாட்சிகள் காலப்போக்கில் குறைந்து வருவது உண்மையை வெளிக்கொணரும் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.எனவே, ஒன்பதாவது ஆண்டு நிறைவையொட்டி வட்டுவாகல் பாலப்பகுதியில் நடைபெறும் போராட்டத்திற்கு அரசியல்பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், குடியியல் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.தங்களது உறவுகளுக்கான நீதி கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.